Tuesday, June 30, 2009

தண்டனை ((உரையாடல் சிறுகதை போட்டி)


இந்த பத்து நாட்களும் எவ்வளவு கோலாகலம். மனிஷா சிரித்துக்கொண்டே இருக்கிறாள். நகரின் முக்கிய பணக்காரர்களில் அவள் அப்பாவும் ஒருவர். வைர வியாபாரி. அவள் பெரிய அழகி இல்லை என்றாலும், பணமும், அழகு சாதனங்களும், அதை விட முக்கியமாக நல்ல குணங்களும், புன்னகையும் அவளுக்கு எப்போதும் ஒரு பொலிவு கொடுத்தது. நாளையுடன் இந்தக் கோலாகலம் முடிந்துவிடும். வரவேற்பு அட்டையே ஏழு பக்கங்கள்; தங்க எழுத்துக்களில். அழைப்பிதழ்களுடன் ஒரு இனிப்புப் பெட்டியும் அனுப்பப்பட்டது. நிகழ்ச்சி நிரல்களில் ஆடலும் பாடலும் நிகழ்த்தும் பல கலைஞர்கள்.


இந்த எல்லா நிகழ்ச்சிகளுமே அவள் பாட்டனார் கட்டியிருந்த கல்யாண மண்டபத்தில் நடந்து கொண்டிருந்தன. மண்டபத்தின் முதல் தளத்தில் இருந்த பெரிய கூடத்தில், மணப்பெண்கள் அமரும் அழகிய, வெள்ளி சிம்மாசனத்தில் மனிஷா அமருகிறாள். ஏராளமான பெண்கள், முகத்தில் கணிசமான பவுடர் சுவட்டுடன், அவளருகில் வந்து அன்பின் சின்னமாகப் பரிசுகளை அளித்துவிட்டுச் செல்கிறார்கள். சிலர் அவளை உச்சி முகர்கிறார்கள். மற்றவர்கள் அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு விட மறுக்கிறார்கள். பல்வேறு நகைகளுடன் - அவள் சிரத்தில் மிக அழகாக மின்னும் ஒரு பெரிய வைரம் ஜொலிக்கிறது - எப்போதும் பூக்கும் புன்னகையுடன் மனிஷா சொல்கிறாள் "என் பெற்றோர்களுக்கு என்னை ராணி போல அலங்கரிக்க ஆசை".


யாரும் கவனிக்காத மூலையில் அமர்ந்திருக்கும் அவள் சித்தி கண்ணீருடன் தோற்றுக்கொண்டே "இன்னும் சில தினங்களில் அவள் எங்களிடமிருந்து சென்று விடுவாள். நாங்கள் சொந்தம் கொண்டாட முடியாது" என்கிறாள். மனிஷா இரண்டு வருடங்கள் முன்பு பட்டப்படிப்பை முடித்திருந்தாள். எல்லா பதின்ம வயதினர் போலவே அவளும் விருந்துகள், கொண்டாட்டங்கள், திரைப்படங்கள், விளையாட்டு என்று தவறு காண முடியாத உற்சாகக் குமிழாக இருந்தாள். இரண்டு வருடங்கள் முன்பு ஆகஸ்ட் மாதம் ஒரு மழை நாளில் கல்லூரியில் இருந்து திரும்பும் போது இருட்டி விட்டது. மனிஷாவின் பெற்றோர்கள் ஒரு அவசர நெருக்கடியால் மதியம் வெளியூர் சென்று விட்டனர். பக்கத்துக்கு வீட்டினர் இவர்களுக்குத் தூரத்து சொந்தம். அங்கு சாவி வாங்கிக் கொள்வதற்காகச் சென்றாள்.


அதற்குப் பின் அவள் மிக அமைதியாகி விட்டாள். நீண்ட தூரம் நடக்கத் துவங்கினாள். விரதங்கள், நோன்புகள் என்று பசியை வெல்ல, எதிர்கொள்ளப் பயின்றாள். திருமணப் பேச்சு வந்த போது, தவிர்த்து, மேலே படிக்க வேண்டும் என்றாள். தந்தையின் செல்லப் பெண். அனுமதி கிடைத்து, அஞ்சல் வழியில் படிப்பு தொடர்ந்தது. மிக அமைதியாகவும், ஆழமான சிந்தனைகளுடனும் அதே சிரித்த முகத்துடனும் வளைய வந்தவளை அவள் பெற்றோர்கள் அவ்வளவு நுட்பமாகக் கவனிக்கவில்லை.


அவளுக்கு இரு மூத்த சகோதரிகள். திருமணம் ஆகியிருந்தது. அவர்களும் அவளை மணம் செய்துகொள்ள நச்சரிக்கத் துவங்கினர். "நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்களா? கல்யாணம் செய்துகொண்டு என்ன சாதித்தீர்கள்" என்று கேட்டவளுக்கு அவர்களிடம் சரியான பதில் இல்லை. மறுநாள் காலை. மனிஷாவின் குரு வந்திருக்கிறார். அவரும் இவளும் நிறைய நேரம் பேசுகிறார்கள். எல்லாவற்றைப் பற்றியும். ஆயுள் காப்பீடு, வரிச் சலுகைகள் முதல் மிக்கேல் ஜாக்சன், குழந்தைகள் என்று பலவும். ஊர்வலம் தயாராக நிற்கிறது. ஆயிரம் பேருக்கு மேல். இந்த மண்டபத்திலிருந்து, கோயிலை ஒட்டியிருக்கும் பொது மைதானத்திற்குச் செல்லப் போகும் ஊர்வலம்.


அங்கு சென்றடைய இரண்டு மணிநேரம் ஆகிறது. சிகப்புப் பட்டாடையில் அமர்ந்திருக்கும் மனிஷா தன நீண்ட கூந்தலைச் சரிசெய்து கொள்கிறாள். நெற்றிப் பொட்டைச் சரி பார்த்துக் கொள்கிறாள். சற்று நேரத்திற்குப் பிறகு அவள் குளித்து, புதிய ஆடையில் வந்து அமர்கிறாள். சில நிமிடங்கள் முன்பு அவள் சிரத்தில் இருந்த முடிக்கற்றைகள் முற்றிலும் மழியப்பட்டன. வெள்ளை உடையில் சாந்தமாக வந்து அமர்கிறாள். இப்போது அவள் பாட்டியிலிருந்து முகச்சுருக்கம் நிறைந்த பல மூதாட்டிகள், இளைமையுடன் தோற்றுக் கொண்டிருக்கும் மத்திய வயதுப் பெண்கள் என்று பலரும் சுருக்கத்தின் சாயலே தென்படாத அவள் பாதங்களில் வணங்குகிறார்கள். சிலர் மௌனமாகக் கண்ணீர் சிந்துகிறார்கள். அவளுடைய பெற்றோரைக் காணவே முடியவில்லை. அவள் சித்தி இன்னமும் அழுது கொண்டிருக்கிறாள். இப்போது அவள் பக்கத்து வீட்டு அத்தை வருகிறாள். அவள் தற்போது வேறு ஊரில் இருக்கிறாள். தாங்க முடியாமல் வீறிட்டு அழுகிறாள். "எங்களை இப்படித் தண்டிக்கலாமா நீ" என்கிறாள். மனிஷா ஒன்றும் சொல்லாமல், புன்னகை பூக்கிறாள். சாந்தமான அம்முகத்தில் வன்மத்தின் சாயல் துளியும் இல்லை.


இவர்கள் பேசும் அதே நேரத்தில், வேறு ஒரு ஊரில், இவர்கள் இருவருக்கும் பரிச்சயமான ஒருவர், தனது வீட்டில் மின்விசிறியின் மேல் ஒரு புடவையைப் போட்டுக் கொண்டிருந்தார்.

(உரையாடல் :சமுக கலை இலக்கிய அமைப்பு நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது)

Sunday, March 8, 2009

இல்லதரசிகள் Vs வேலைக்கு செல்லும் பெண்கள்

எல்லோருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள். அதிலும் முக்கியமாக இல்லதரசிகளுக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்.

வேலைக்கு போவது கஷ்டம்தான்.. அதோடு வீட்டையும் பார்த்து கொண்டு போவது மிகப் பெரிய சர்க்கஸ். ஆனால் இதை உணர்ந்து இப்பொழுது நமக்கு நல்ல சப்போர்ட் சிஸ்டம் ( வீட்டு வேலை, சமையல் ஆகியவைகளுக்கு ஆட்கள் )and சலுகை கிடைக்கிறது. வீடு clean ஆக இல்லை என்றால், பாவம், வேலைக்கு போறா ! எவ்ளோதான் பண்ண முடியும் ? இந்த மாதிரி பல.

அதே சமயம் வாய்ப்பும் வசதியும் இருந்து குடும்ப சூழ்நிலைகளாலும் இன்ன பிற காரணங்களினால் வேலைக்கு போகாமல் வீட்டை காக்கும் பெண்கள் போற்றப்பட வேண்டியவர்கள். அனைவருக்கும் வெளியே செல்ல பிடிக்கும் ( அது வேலைக்காகவே இருந்தாலும் கூட !) வீட்டில் இருந்து பார்த்தால்தான் தெரியும் நச்சு வேலைகள் non-stop nonsense என்று. விடாது ஒலிக்கும் calling பெல், தொலை பேசி என அடுக்கிக் கொண்டே போகலாம். On top of it , " நாள் முழுக்க வீட்டுல என்ன பண்ணுவ " போன்ற கேள்விகள். சும்மா தானே இருக்க - பல "கோர்ஸ்" களக்கு செல்லலாமே என அட்வைஸ் மயம்.


எனவே இந்தக் கால இல்லதரசிகளுக்கு இன்னும் ஒரு முறை சிறப்பான மகளிர் தின வாழ்த்துக்கள்.

நான் வணங்கும் முதல் பெண் 'மணி'

Blog எழுதணும்னு வந்து விட்டாலும் எங்கு எப்படி ஆரம்பிப்பது என starting troble இருந்தது. இடையில் ஆணி வேற அதிகம். கொஞ்சம் நேரம் கிடைத்த பொழுது சரியாக " சர்வதேச மகளிர் தினம் ". ஊரெங்கும் கொண்டாட்டமாக இருக்க, நானும் ரொம்ப நாளாக என் மனதில் தோன்றியதை எழுத ஆசைப்படுகிறேன்.


எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து வியந்து போற்றுவது என் பாட்டி (தந்தையின் தாய்). சிறு வயதிலேயே தாயை இழந்து குடும்ப பாரத்தை அறிந்தவர். அந்த கால வழக்கம் போல வயது டபுள் digit வருவதற்குள் திருமணம் முடிந்து விட்டது. பெரிய குடும்பம், கோபக்கார கணவர், அதிக உதவி இல்லாத பிறந்தகம் என இருந்த போதும் அதை நிறைவாக ஏற்று வாழ்க்கை ஓடி கொண்டிருந்தது. ஆனால் அதிலும் மண் விழுந்தது. பதினைந்து நாட்களுக்குள் வீட்டில் மூவர் (மாமியார், பெரிய கொழுந்தனார், கணவர் ) "பெரிய" நோயால் இறந்தனர். அப்பொழுது என் அப்பாவிற்கு பத்து மாதம். அன்றிலிருந்து எங்கள் பாட்டி இறக்கும் வரை (92 வயது) ஒரு கர்ம யோகியாக வாழ்ந்து காட்டினார்.

அந்த காலத்தில் சிறிய வயதில் இருந்த தீர்க்க தரிசனைத்தை என்னென்று சொல்வது ! ஊருளிலுள்ள சொத்துக்கள், நகைகள் எது போனாலும் பரவாயில்லை ஆனால் படிப்பு ஒன்றே தன் மகனுக்கு நிலையான சொத்து என அறிந்து அதில் வெற்றியும் பெற்றார். அந்த முடிவு இன்று பல தலைமுறைகளை காக்கின்றது. என்ன ஆனாலும் காலை 4 மணிக்கு எழுந்து இரவு படுக்கும் வரை ஓயாது உழைப்பு, ஒரு வார்த்தை அதிர்ந்து பேச மாட்டார். தாயும் மகனும் ஒன்றாக உட்கார்ந்து பேச கூட மாட்டார்கள். ஆனால் அந்த அன்பை உணரத்தான் முடியும்.

தனது 80 வது வயதில் கீழே விழுந்து கோமா நிலையில் இருந்து மீண்டு வந்தது என் பாட்டியின் மன உறுதியே, ஏனென்றால் அப்பொழுதுதான் நாங்கள் புது வீடு கட்டி இருந்தோம் - தன்னால் அந்த வீட்டிற்கு எந்த ஒரு கெட்ட பெயரும் வந்து விடக் கூடாது என்பதால்.(எங்கள் தாய்க்கு சொந்த வீடு என்பது மிகப் பெரிய ஆசை) கடைசி வரை மருமகளை மகளாக பாவித்து, ஒரே வீட்டில் சம்மந்திகள் ஒற்றுமையாய் வாழ்ந்தது ( என் தாயும் ஒரே பெண் ) என பல ஆச்சரியங்கள். தாய் வழி பாட்டி இவரை போல் இல்லா விட்டாலும் மிக வித்தியாசமானவர். அவரைப் பற்றி வேறொரு பதிவில் காணலாம் ( "அப்பாடா" - காதில் விழுகிறது). தவறு செய்யும் பொழுது கூட அதை வேண்டாம் என மிக இனிமையான முறையில் கூறி கேட்கும் வண்ணம் செய்ய ஆளுமை இருந்தது. இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். இப்பொழுதுதான் " உண்மைத் தமிழனின் " கஷ்டம் புரிகிறது.

அடிக்கடி என் பாட்டி " நான் சொல்றதோட அருமை இப்போ தெரியாது, பின்னாடி நீயே புரிஞ்சுப்பே" எனும் பொழுது சிரித்து விட்டு சென்று விடுவேன். இப்போ நினைக்காத நேரமில்லை.

பாட்டி - Hats off !

Wednesday, January 28, 2009

எல்லோருக்கும் வணக்கம்.
வெற்றிகரமாக பதிவுலகத்தில் காலடி எடுத்து வைச்சாச்சு. இந்த புது உணர்வு நல்லா இருக்கு. சைக்கிள், அல்லது வண்டி புதிதாக ஓட்டும் போது ஏற்படும் சந்தோசம், த்ரில் கிடைக்கிறது. இந்த பதிவுலகத்தில் உண்மையாக உணர்ந்ததை பகிர்ந்து கொள்ள ஆசை. விரைவில் தமிழில் எழுத முயற்சிப்பேன்.

இது நான் முதலாக எழுதிய பதிவின் தமிழாக்கம். " தமிழ் மணத்தின்" கட்டாயம்.
அன்புடன்
மாசற்ற கொடி